பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 ஜூன், 2020

விநாயகர் அகவல் - சீர் பிரித்தது

விநாயகர் அகவல் 

இயற்றி அருளியவர் : அவ்வையார் 



சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்து  அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠   05

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் ⁠ 10

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழம்  நுகரும் மூஷிக வாகன! ⁠ 15

இப்பொழது என்னை  ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத்  தான் எழுந்தருளி 
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து ⁠20

குரு வடிவாகிக் குவலயம்  தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து  எனக்கருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும்  கருத்தினை அறிவித்து 
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠30

தலமொரு நான்கும் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் ⁠35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 
இடை பிங்கலையின் எழுத்தறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் ⁠40

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே 
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் 
எண் முகமாக இனிதெனக் கருளிப் ⁠50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி 
என்னை அறிவித்(து) எனக்கருள் செய்து ⁠55
 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன்  சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி இரண்டுக்கும்  ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் ⁠60

எல்லை யில்லா ஆனந்தம் அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் ⁠65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் ⁠70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! ⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக