திருஞான சம்பந்தர் அருளிய திருவெழுக் கூற்றிருக்கை
பாடல் தலம் : சீர்காழி
இறைவன் : தோணியப்பர்
பாடல் பயன் : தொடர்ச்சியாக தடைப்படும் வேலை, படிப்பு, தேர்வு , வரன் , சுபகாரியங்கள் என வரும் செயல்கள் அனைத்தும் தடைகள் நீங்கி சுபமாகநடந்தேறும் ; தந்தையின் உடல் நலம் பெறவும் , ஒருவரது மன நலம் சீராகவும், புண்ணியம் செய்தும் பலன் இல்லாமல் தவிக்கும் நிலையிலும் இதனைப்படித்து தோணியப்பரின் நிறைந்த அருளைப்பெற்று நலமுடன் வாழலாம்.
ஓர் உரு ஆயினை ; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை ;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை .
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை ; நாட்டம் மூன்றாகக் கூட்டினை
இருநதி அவரமோடு ஒருமதி சூடினை ;
ஒரு தாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மாரி , ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை
ஒருதனு இருக்கால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச ,
கொன்று தலத்து உற அவுணரை அருத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம் ,
முக்குணம் , இருவளி , ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து , முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி , ஐவகை வேள்வி
அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி
வரன்முறை பயின்ற எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை ;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை ;
இகலி அமைந்து உணர்ப்புகலி அமர்ந்தனை ;
பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விலங்கினை ;
பாணி மூவுலகும் புதைய , மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை ;
வரைபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை ;
ஒருமலை எடுத்த இருத்திரள் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை ; புறவம் புரிந்தனை ;
முந்நீர்த் துயின்றோன் , நான்முகன் அறியாப்
பண்போடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அருவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இமையின் ஒருமையும் , ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல, முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் ;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே !
- திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக