பின்பற்றுபவர்கள்

திருவாசகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாசகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜூன், 2020

போற்றித் திருவகல்

திருச்சிற்றம்பலம் 

ஓம் நமசிவாய !!


மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திருவகவல் 

திருவாசகம் -தில்லையில் அருளியது 

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ

ஈர் அடியாலே மூவுலகு அளந்து

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்

போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று

அடிமுடி அறியும் ஆதரவு அதனில்

கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து

ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து

ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்

வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10


யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20


ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை

ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

காலை மலமொடு கடும்பகல் பசி நிசி

வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30


ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து

எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்

மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்

கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40


புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும் 50


சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்

சமய வாதிகள் தம்தம் தங்களே

அமைவது ஆக அரற்றி மலைந்தனர்

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து

உலோகா யதமெனும் ஒண்டிறப் பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதில் பெருமாயை எனைப்பல சூழவும்

தப்பாமே தாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகு அது போலத் 60


தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்

கொடிறும் பேதையும் கொண்டது விடாதென

படியே ஆகி நல் இடைஅறா அன்பின்

பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்

கசிவது பெருகிக் கடல் என மறுகி

அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை

பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70


சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்

கதியது பரமா அதிசயம் ஆகக்

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்

பிறிவினை அறியா நிழல் அது போல

முன் பின்னாகி முனியாது அத்திசை

என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80


அன்பு எனும் ஆறு கரை அது புரள

நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்

கண்களி கூர நுண் துளி அரும்ப

சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்

தாயே ஆகி வளர்த்தனை போற்றி

மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்

கைதரவல்ல கடவுள் போற்றி

ஆடக மதுரை அரசே போற்றி 90


கூடல் இலங்கு குருமணி போற்றி

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி

கல் நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி

ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100


இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவா போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரை சேர் சரண விகிர்தா போற்றி

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி 110


கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி

ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை

ஆழாமே அருள் அரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி 120


வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி அரனே போற்றி

உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி

விரிகடல் உலகின் விளைவே போற்றி

அருமையில் எளிய அழகே போற்றி

கருமுகி லாகிய கண்ணே போற்றி

மன்னிய திருவருள் மலையே போற்றி

என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்

சென்னியில் வைத்த சேவக போற்றி 130


தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி

அழிவிலா ஆனந்த வாரி போற்றி

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மான்நேர் நோக்கி மணாளா போற்றி

வான்அகத்து அமரர் தாயே போற்றி

பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140


வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவர் உள்ளதது அமுதே போற்றி

கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி

நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி

இடைமருது உறையும் எந்தாய் போற்றி

சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீர் ஆர் திருவையாறா போற்றி

அண்ணாமலை எம் அண்ணா போற்றி

கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150


ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

பராய்த் துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி

குற்றாலத்து எம் கூத்தா போற்றி

கோகழி மேவிய கோவே போற்றி

ஈங்கோய் மலை எந்தாய் போற்றி

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160


அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி

இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு

அத்திக்கு அருளிய அரசே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி

என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள் கெட அருளும் இறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170


களம் கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி

நித்தா போற்றி நிமலா போற்றி

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி 180


உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி

சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலை நாடு உடைய மன்னே போற்றி

கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190


திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி

பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமும் இறந்த சுடரே போற்றி

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி

தேளா முத்தச் சுடரே போற்றி

ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி

ஆரா அமுதே அருளா போற்றி

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200


தாளி அறுகின் தாராய் போற்றி

நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி

மந்திர மாமலை மேயாய் போற்றி

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி

அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி

கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி

இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210


படி உறப் பயின்ற பாவக போற்றி

அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி

நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி

ஒழவற நிறைந்த ஒருவ போற்றி

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி

கழு நீர் மாலைக் கடவுள் போற்றி

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்

குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220


புரம்பல் எரித்த புராண போற்றி

பரம் பரம் சோதிப் பரனே போற்றி

போற்றி போற்றி புயங்கப் பெருமான்

போற்றி போற்றி புராண காரண

போற்றி போற்றி சய சய போற்றி 225

சிவபுராணம்!

ஓம் நமசிவாய போற்றி!!!

மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்

 திருவாசகம்- எட்டாம் திருமுறை

(திருப்பெருந்துறையில் அருளியது - தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ⁠5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ⁠10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ⁠15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். ⁠20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் ⁠25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ⁠35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ⁠40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே ⁠45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை ⁠50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, ⁠55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் ⁠65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே ⁠70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று ⁠85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. ⁠95


(படத்தில், திருப்பெருந்துறை ஆவுடையார்)