பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 அக்டோபர், 2020

அமாவாசையில் பௌர்ணமி! விழிக்கே அருளுண்டு!

 நாளை  அமாவாசை!

அமாவாசையில் பௌர்ணமி தெரியுமா ?! தெரியும் என்கிறார் ஒருவர்! அதுவும் பரிபூரண பௌர்ணமியாம் !

அதுவும் இது வரை எத்தனையோ பௌர்ணமிகளை பார்த்திருந்தாலும் சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் முன்பெப்போதும் கண்டிராத ஒரு அதிசயமான பௌர்ணமியை காண கிடைக்க பெற்றார்கள். இருபது கோடி நிலவுகள் ஒன்றாக வானில் கொட்டிக் குவிந்தது போன்ற அந்த கண்கொள்ளா காட்சியை அவர்கள் காண காரணமாய் இருந்தது இரண்டு பேர்.
ஒன்று அபிராமி பட்டர்.
இன்னொன்று முதலாம் சரபோஜி மன்னர்.
இயக்கம் சாட்சாத் அன்னை அபிராமியே!
‘அபிராமி அபிராமி’ என்று சதா அவள் நினைப்பில் திருக்கடையூர் கோவிலில் இருந்தவரை, திடுதிப்பென்று அங்கு வந்த மன்னர் ‘இன்று என்ன திதி?’ என்று அவரிடம் கேட்க,
பொன்னிலவொளியான அபிராமி அவள் திருமுக நினைவில் ‘இன்று பௌர்ணமி!‘ என்று பதிலளிக்க ரணகளமாகிறது அந்த இடம்.
ஏனெனில் அன்று தை அமாவாசை!
‘பட்டரே இன்று நீர் சொன்னது போல் பௌர்ணமி வரவில்லையெனில் உங்கள் கதி அதோ கதி தான்!’ என மன்னர் மிரட்ட,
‘கதியா ?! எனக்கு ஏது கதி! என் விதியே அபிராமி அல்லவா!’ என்று அன்னையை நினைத்து மனமுருகி பாடல்களைப் பாட ஆரம்பிக்கிறார்.
79வது பாடலான
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களை செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும்கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.
என்றப் பாடலைப் பாடுகிறார்.



பாடல் பொருள் :
கருணைக்கடலான அன்னை அபிராமிவல்லியின் கண்களே போதும், அவளது பேரருள் எனக்கு கிடைத்துவிடும். அதோடு, வேதங்கள் சொன்ன முறைப்படி அவளை நெஞ்சார வழிபடலாமென எண்ணிவிட்டேன்! அப்படியிருக்க
வீண் பழி பெரும் பாவங்கள் மட்டுமே செய்து என்னை பாழ் நரகத்து குழியில் தள்ள திட்டமிடும் கயவரோடு இனி எனக்கு என்ன கூட்டு ?
பாடல் பயன் :
சர்வ சங்க பரித்யாகம் கிட்ட பாடப்படும் பாடல்
அதுவரை பட்டரின் பக்தி வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருந்த அபிராமி இந்த பாடலை பட்டர் பாடியதை கேட்டதும் உள்ளம் குளிர தன் தோடுகளை வீசி எறிகிறார். அதுவே கோடி நிலவுகளாய் ஜொலிக்க, பட்டர் மன்னர் முதற்கொண்டு அங்கே கூடியிருந்த அனைவரும் தை அமாவாசையான அன்று பேரருள் நல்கும் அவளது திருவடிவை பேரொளியான பௌர்ணமியாய் தரிசித்தார்களாம்!!
ஓம் அபிராமவல்லி தாயே போற்றி!!

புதன், 14 அக்டோபர், 2020

துப்புடையாரை அடைவது எல்லாம்

 நம்ம எல்லாரும் பொதுவா ஒரு சமயத்துலயாவது ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் இன்சூரன்ஸ் எடுத்திருப்போம் இல்லையா ? எதுக்கு? நமக்கும் மீறிய ஏதாவது ஒரு சம்பவத்தில் நமக்கோ நம்ம உடமைகளுக்கோ ஏதாச்சும் ஆச்சுன்னா , அந்த கஷ்டமான காலத்துல நம்மையும் நம்மை சேர்ந்தவங்களையும் சுதாரிச்சுக்க ஒரு பிடிப்பு வேணும்ங்கிறதுக்காகத் தானே ?! அது மாதிரி, இந்த பாட்டு மூலமா, பெரியாழ்வாரும் நம்ம பெருமாள் கிட்ட இன்சூரன்ஸ் எடுத்துகிறார், ப்ரீமியம் - அவரின் ஆயிரம் நாமங்கள்!!!

துப்புடையாரை அடைவது எல்லாம்*

சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*

ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*

எய்ப்பு என்னை வந்து நலியும்போது*

அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்*

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*

அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)
பாடல் இயற்றியவர் : பெரியாழ்வார்

எப்படி வேண்டுகிறார் ?
பெருமானே! உன் அடியவர் ஆவதற்கு எனக்கு தகுதி இல்லை,
எனக்கு உன்னையன்றி வேறு வழியும் இல்ல, நம்பியவர்களை எப்போதும் காக்கும் அரங்கா, நானும் உன்னையே நம்பி கூப்பிடுகிறேன். என்னோட வயதான காலத்துல , இருக்கிற கஷ்டத்துல உன்னை நினைப்பேனோ இல்லயோ எனக்கு தெரியாது.. அதனால அப்போதைக்கும் சேர்த்து இப்போவே உன்னை மனதார கூப்பிடுகிறேன்.. எனக்கு நீயே துணை என்று மனமுருகி வேண்டி தன் அப்பழுக்கற்ற பக்தியின் மூலமா எப்போ எது நடக்கும்ன்னு தெரியாத இந்த மானுட வாழ்வின் மாயப்போக்கையும் , அதன் மீது தனக்குள்ள அங்கலாய்ப்பையும் யதார்த்தமாக இப்படி
வெளிப்படுத்துகிறார் நம்ம விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார்!
இலக்கணப் பொருள் :
துப்பு உடையார் - உன்னால் பயனடையும் உன் அடியவர்
எய்ப்பு - தளர்வு - தள்ளாடும் முடியாத நிலை
ஒப்பிலேன் - ஒப்பு + இலேன்
ஒப்பு - ஒப்புமை - பொருத்திப் பார்த்தல்
(உன் அடியவரோடு ஒப்பிட்டால் நான் ஒன்றுமே இல்லாதவன் )
ஆனைக்கு - யானைக்கு ( கஜேந்திர்மோட்ச கதை)