ஸ்ரீ ஹனுமன் சாலீசா
இயற்றி அருளியவர் - துளசி தாசர்
*த்யானம் விருத்தம்*
குருநாதனே துணை வருவாய் (2)
வாயுபுத்ரனே வணங்கினேன் (2)
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜெயஹனுமானே! ஞானக்கடலே!
உலகத்தின் ஒளியே! உமக்கு வெற்றியே! (1)
ராம தூதனே! ஆற்றலின் வடிவமே!
அஞ்சனை மைந்தனே! வாயு புத்ரனே! (2)
மகா வீரனே! மாருதி தீரனே!
ஞானத்தைத் தருவாய் ! நன்மையை சேர்ப்பாய் (3)
தங்க மேனியில் குண்டலம் மின்ன,
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர (4)
தோளிலே முப்புரி நூல் அணி செய்ய,
இடியும் கொடியும் கரங்களில் தவழ (5)
சிவனின் அம்சமே! கேசரி மைந்தனே!
உன் ப்ராதாபமே! உலகமே வணங்கும்! (6)
அறிவில் சிறந்தவா! சாதுர்யம் நிறைந்தவா!
ராம சேவையே சுவாசமானவா! (7)
உன் மனக்கோவிலில் ராமனின் வாசம்!
ராமனின் புகழைக் கேட்பது பரவசம்! (8)
ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2)
உன் சிறுவடிவை சீதைக்குக் காட்டினாய்,
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய் (9)
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே (10)
ராமன் அணைப்பில் ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனைக் காத்த சஞ்சீவி! (11)
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்,
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்! (12)
ஆயிரம் தலைக்கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான் (13)
மூவரும் முனிவரும் ஸனக ஸநந்தரும்
நாரதர் சாரதை ஆதி சேஷனும் (14)
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ (15)
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய் (16)
ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2)
இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே, உன் அருளாலே! (17)
கதிரவனைக் கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே! (18)
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலைக் கடந்து ஆற்றலைக் காட்டினாய் (19)
உன்னருளால் முடியாதது உண்டோ ?!
மலையும் கடுகென மாறி விடாதோ?! (20)
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே!
ராமனின் பக்த்தர்க்கு எளியவன் நீயே! (21)
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்!
கண் இமைப் போலக் காத்தே அருள்வாய்! (22)
உனது வல்லமை சொல்லத் தகுமோ?!
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே! (23)
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்!(24)
ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2)
ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்கும்
துன்பங்கள் விலகுமே! இன்பங்கள் சேர்க்குமே !(25)
மனம் மெய்மொழியும் உந்தன் வசமே !
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே! (26)
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே!
ராமனின் பாதமே! உந்தன் இடமே! (27)
அடியவர் நிறைவே! கற்பகத்தருவே!
இறையனுபூதியை தந்திடும் திருவே! (28)
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்!
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்! (29)
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்!
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்! (30)
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே!
அன்னை ஜானகி தந்தாள் வரமே!(31)
ராம பக்தியின் சாரம் நீயே!
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே!(32)
ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2)
ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்!(33)
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை?! (34)
என் மனக்கோவிலில் தெய்வமும் நீயே!
உன்னையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே!(35)
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்! (36)
ஜெய ஜெய ஜெய ஜெய ஸ்ரீ ஹனுமானே !
ஜகத்தின் குருவே! ஜெயம் தருவாயே! (37)
"ஹனுமன் சாலீசா" அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்! (38)
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்!
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்! (39)
அடியவர் வாழ்வில் ஹனுமானின் அருளே!
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே! (40)
ராம லக்ஷ்மண ஜானகி ! ஸ்ரீ ராம தூதனே மாருதி (x 2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக