பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2021

திருவெம்பாவை

 திருவெம்பாவை 


மாணிக்கவாசகரால் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவெம்பாவை 20 பாடல்களைக்கொண்டது. 


திருப்பவையாய்ப் போலவே பாவைநோன்பிருக்கும் பெண்ணாக தன்னை பாவித்து சிவபெருமானது பெருமைகளைசொல்லி தோழியரை நோன்பிற்கு அழைப்பது போன்று பாடின பாடல்கள் தான் திருவெம்பாவை. 


மார்கழி மாதத்தில் திருப்பாவையும் திருவெம்பாவையும் கேட்பது போன்ற பாக்கியம் வேறெதுவுமில்லை என்கிறஅளவிற்கு  இந்த இரண்டு பாடல்களிலும் இறைவன் மேல் உள்ள பக்தியும்  அன்பும் எவரையும் மெய்மறக்க செய்திடும். 


திருவெம்பாவை முதல் பாடல்



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்


மார்கழி மாதத்தில் பெண்கள் எல்லாரும் பரம்பொருளான சிவபெருமானை நோக்கி பாவை விரதம் மேற்கொண்டுள்ளனர் 

ஆனால் ஒருத்தி மட்டும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்பி விடுவதற்காக பாடுவதாக அமைந்த பாடல் இது.. 


“வாள்போன்ற அழகிய கண்களை உடைய பெண்ணே.. 

 ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெரும்ஜோதியான சிவபெருமானின் எல்லையற்ற கருணையை நாங்கள் பாடிக்கொண்டிருந்ததை  நீ கேட்டாயா? நாங்கள் பாடியது உன் காதில் விழவில்லையா? உனக்கு என்ன காது கேட்காதா? சிவபெருமானின் பெரும்புகழை நாங்கள் பாடியதை கேட்டு, தெருவில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருத்தி விம்மி விம்மி அழுது புரண்டு விழுந்து மயங்கியே போனாள். தெருவில் ஒரே சலசலப்பு!  நீ என்னடா என்றால் இப்படி தூங்கிக்கொண்டிருக்கிறாயே.. வா.. எழுந்திரு. எங்களோடு நோன்பிருக்க வா தோழி. என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் 


ஓம் நம சிவாய போற்றி! 🙏🙏


#அர்த்தமுள்ள_ஆன்மீகம் #மார்கழி #திருவெம்பாவை #மாணிக்கவாசகர்

திருப்பாவை பாடல் 1

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; 

 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! 

 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! 

 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், 

 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் 

 நாராயணனே, நமக்கே பறைதருவான், 

 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.



இது திருப்பாவையின் முதல் பாடல். 

அதிகாலை நேரம். நோன்பிருக்க  உகந்த நேரம். கோபிகையான ஆண்டாள் துயில் எழுந்து நீராட தயாராகிவிட்டாள். ஆனால் அவளது சக கோபியரை இன்னும் காணோம். எனவே அவர்களை கூட்டாக அழைக்கிறாள். சிறு குழந்தையிடம்  அதற்கு பிடித்ததை சொல்லி மனம் கோணாமல் வேலை வாங்குவது போல்,   அவர்களது செல்வ சிறப்பை, சீரான அழகை சொல்லி அழைக்கிறாள்.. 


நேரிழையீர் - ‘அழகான ஆபரணங்களை அணிந்த பெண்களே’, என்கிறாள்


சீர்மல்கும் ஆயர்பாடி - சீரும் சிறப்புமான ஆயர்பாடி


செல்வ சிறுமீர்காள் - வளமான இளம்பெண்களே! என்று அழைக்கிறாள். 


சரி அழைத்தாயிற்று; எதற்காக அழைக்கிறோம் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? 


நாராயணனுக்காக இந்நோன்பு என்கிறாள். யார் இந்த நாராயணன்? 


அதோ , மகனை எந்தவொரு தீங்கும் வாராதிருக்க எப்போதும் தன் கையில் கூரிய சிறு கத்தியை கையில் வைத்துக்கொண்டு அவனுக்கு அரணாக இருக்கிறாரே, நந்தகோபர் , அவரின் மகன்!  

கூர் வேல் கொடுந்தொழிலன் - நந்தகோபன்


பேரழகு கண்களோடு இருக்கிறாளே யசோதை- 

ஏரார்ந்த கண்ணி- அவர் தான் அவனின் அம்மா, அவரின் சிங்கக்குட்டி தான் நமது நாராயணன். 


நாராயணனா.. அவன் எப்படி இருப்பான்? 


கருகருவென அடர்ந்த மழைமேகம் போல இருப்பான்; சூரியனைப் போல ஜொலிக்கும் கண்கள், நிலவைப்போல ஒளிரும் முகம் உடையவன், என்கிறாள்


கார்மேனி - கருத்த மேகம் போன்றதொரு உடல்

செங்கண் கதிர் - சூரியனைப்போன்ற கண்கள்

மதியம் போல முகத்தான் - நிலவைப் போன்ற முகம்


அவனை நாம் நோன்பிருந்து வணங்கினால் நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றுவான். 

பறை - விருப்பம்


சீக்கிரம் எழுந்து வாருங்கள் தோழியரே! என அழைக்கிறாள் ஆண்டாள். 


பொருள்: 


தோழிகளே, 

நமது பாவை நோன்பிற்காக மார்கழி மாத முழு நிலவு நிறைந்த இந்நாளில் நீராட போகலாம் வாருங்கள்.. 

ஆயர்பாடியின் அழகிய பெண்களே, 

மகனைப் பாதுகாப்பதே தன் வேலையாக கொண்டுள்ள  நந்தகோபர் மற்றும் அழகிய கண்களை உடைய யசோதை அவர்களின் சிங்கக்குட்டி , கருமேகங்களைப் போன்ற உடலும், சூரியன் போல ஒளிரும் முகத்தையும் கொண்ட நாரயணன் நமது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவான், எனவே அனைவரும் பாராட்டும்படி நோன்பிருக்க உடனே எழுந்து வாருங்கள் தோழியரே!